Tuesday, November 21, 2023

கட்டுமான நிறுவனங்களிடம் நியாயமாக நடந்துகொள்ள வேண்டியது அவசியம்!

 கட்டுமான நிறுவனங்களிடம் நியாயமாக நடந்துகொள்ள வேண்டியது அவசியம்!

வீடு கட்டுவது என்பது தனி ஒருவர் சார்ந்த விஷயம் அல்ல என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.  உங்களுக்கான வீடு கட்டுவதில் பல்வேறு நிலையில் உள்ளவர்கள் சம்பந்தப்பட்ட வேண்டியது இருக்கிறது.
        இதில், பெரும்பாலும், நமக்கு கட்டுமான நிறுவனங்கள், பணியாளர்கள் மட்டுமே கண்ணில் தெரிகின்றனர்.  ஆனால், பிற நிலையில் பங்கேற்ற பலர் நம் கண்ணில் படுவதே இல்லை.
        புதிதாக சொந்த வீடு கட்டும் திட்டத்தை செயல் படுத்தும் போது முதலில், அதில் எந்த வகையிலும் நாம் நஷ்டப்பட கூடாது என்று நினைப்போம்.  அதே போன்று, நமக்காக வீடு கட்டும் பணியை ஏற்று செயல்படுத்தும் நிறுவனமும் நஷ்டப்பட கூடாது.
         உங்கள் வீடு கட்டும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களும் நஷ்டப்பட கூடாது என்று நினைக்க வேண்டும்.  இதில் கட்டுமான நிறுவனங்கள், பணியாளர்களால் நாம் ஏமாற்றப்பட கூடாது என்று பலரும் நினைக்கின்றனர்.
       அதே நேரத்தில் நாம், நம் எதிர்பார்ப்புகள் வாயிலாக அவர்களை நஷ்டமடைய விட கூடாது என்பதிலும் கவனமாக இருக்க வேண்டும்.  உதாரணமாக, உங்கள் வீட்டை கட்டும் பணியை, சதுர அடிக்கு, 1,900 ரூபாய் விலையில் ஒருவர் ஏற்று இருப்பார்.
       அவரிடம், அதற்க்குள் அடங்கும் வகையில் கூடுதல் வசதிகளை எதிர்பார்ப்பதால் பிரச்னை இல்லை.  ஆனால், சதுர அடி, 3,000 ரூபாய்க்கு கட்டும் திட்டத்தில் செய்து கொடுக்கப்படும் வசதிகளையும் நமக்கான கட்டுமான நிறுவனத்திடம் எதிர்பார்ப்பது சிக்கலை ஏற்படுத்தும்.
      வீடு கட்டும் பணிகளை ஒவ்வொரு நிறுவனமும் தொழில் முறையில் தான் மேற்கொள்கிறது.  இதில் லாபம் பார்க்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள்.
       அதே நேரத்தில் கொள்ளை லாபம் பார்க்க நினைக்கும் சிலரும் இத்தொழிலில் இருக்கின்றனர்.  இதில், எது நியாயமான லாபம் பார்க்கும் நிறுவனம் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

       சில இடங்களில் நியாயமாக கட்டுமான பணிகளை முடித்து கொடுத்த கட்டுமான நிறுவனத்துக்கு கடைசி பங்கு தொகையை நிலுவை வைத்து அலைக்கழிப்பவர்கள் இருக்கின்றனர்.  இது போன்ற நபர்கள் போல, வேண்டுமென்றே கட்டுமான பணிகளை கிடப்பில் போடும் நிறுவனங்களும் இருக்கின்றன.

        வீடு கட்டுவதில் முதலில் நாம் நியாயமாக நடந்து கொள்ள முடிவு செய்ய வேண்டும்.  அதன் பின் கட்டுமான நிறுவனத்திடம் நியாயமான எதிர்பார்ப்புகளை முன்வைக்க வேண்டும்.

         இதில் பரஸ்பரம் புரிதலுடன் உரிமையாளர்களும், கட்டுனர்களும் செயல் பட்டால் சச்சரவுகள் தவிர்க்கப்படும் என்கின்றனர் இத்துறை வல்லுனர்கள்.

Monday, November 20, 2023

வீட்டில் பரண்கள் அமைப்பதால் உள் அலங்காரம் பாதிக்கப்படும்

 வீட்டில் பரண்கள் அமைப்பதால் உள் அலங்காரம் பாதிக்கப்படும்

பொதுவாக, வீடுகளில் பொருட்களை அடுக்க அலமாரிகள், பரண்கள் அமைப்பது வழக்கமாக உள்ளது.  வீட்டின் தரையில் பொருட்கள் குவிவதை தவிர்க்க பரண்கள் பயன்படுத்தப்படுகின்றன.


       தனி வீடுகளில் ஒவ்வொரு அறையிலும் பரண்கள் அமைப்பது பலருக்கும் விருப்பமான ஒன்றாக இருந்து வருகிறது.  ஆனால், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதில் பரண்களுக்கான முக்கியத்துவம் குறைந்துள்ளது.


        ஏனெனில், தற்போதைய சூழலில், பெரும்பாலான அடுக்குமாடி குடியிருப்புகள் உயரம் குறைத்து கட்டப்படுகின்றன.  இவ்வாறு, தரையில் இருந்து மேல் தளத்துக்கான உயரம் குறையும் நிலையில், பரண்கள் அமைப்பதில் சிக்கல் ஏற்படும்.


        பொதுவான வரையறைகளின் அடிப்படையில் ஒரு கட்டடத்தில் பரண் அமைக்க வேண்டுமானால், அதன் அகலம், சுவரில் இருந்து 1.5 அடி வரை இருந்தால் போதும்.  ஆனால், பலரும் 2 அடி வரை அகலத்தை அதிகப்படுத்துகின்றனர்.


        வீட்டில் தேவையற்றவை என வகைப்படுத்தப்படும் அனைத்து பொருட்களையும் பரணில் கிடத்துவது பலருக்கு வாடிக்கையாக உள்ளது.  இதில், பரணில் ஒரு பொருளை போடும் முன் அது உண்மையிலேயே எதிர்காலத்தில் தேவைப்படுமா என்று பார்க்க வேண்டும்.


        அப்படி, எதிர்காலத்தில் உண்மையாக தேவைப்படும் என்ற நிலையில் உள்ள பொருட்களை மட்டுமே பரணில் வைப்பது நல்லது.  மேலும், பெரும்பாலான வீடுகளில் பரணுக்கு கதவு அமைக்கின்றனர்.  இந்த கதவு வெளிப்புறமாக திறக்கும் வகையில் இருப்பது நல்லதல்ல.  பரணின் கதவு வெளிப்புறமாக திறக்கும் விதத்தில் இருந்தால் அது மின்விசிறி பயன்பாட்டுக்கு சிக்கலை ஏற்படுத்தும்.  அதனால், உள் அலங்கார வல்லுனர்கள் வழிகாட்டுதல்களுடன் பரண்களை அமைப்பது நல்லது.  


       அதற்கான கதவுகளை நகரும் முறையில் அமைப்பது அவசியம்.  இதில் குறிப்பாக பல்வேறு அறைகளில் பரண் அமைப்பது போன்று, குளியல் அறையில் பரண் அமைப்பது சில இடங்களுக்கு தேவையாக உள்ளது.


       ‘லாப்ட் டேங்க்’ முறையில் தண்ணீர் வினியோகம் நடக்கும் இடங்களில், குளியல் அறையில் பரண் இருப்பது நல்லது.  கட்டுமான நிலையில் இதை கவனித்து செயல்பட்டால் பல்வேறு சிக்கல்களை தவிர்க்கலாம் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள். 


Saturday, November 18, 2023

புதிய வீடு வாங்குவோர் கட்டுமான நிறுவனங்களை தேர்ந்தெடுப்பது எப்படி?

 புதிய வீடு வாங்குவோர் கட்டுமான நிறுவனங்களை தேர்ந்தெடுப்பது எப்படி?
அடுக்குமாடி குடியிருப்பு அல்லது தனி வீடு எதுவானாலும் அதை யாரிடம் இருந்து வாங்குகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.  இதற்காக, சரியான நிறுவனத்தை தேர்ந்தெடுப்பது மிக முக்கியமான ஒன்று.  இன்றைய சூழலில், கட்டுமான நிறுவனங்கள் மூன்று வகைகளாக பிரிக்கப்படுகின்றன.  முதலில், குறைந்த எண்ணிக்கையில் அதாவது, ஐந்து முதல், 10 வீடுகள் வரை அடங்கிய சிறிய குடியிருப்புகளை கட்டுவோர் சிறிய நிறுவனங்களாக உள்ளனர்.
          இதற்கு அடுத்தபடியாக, 15 முதல், 20 வீடுகள் வரை அடங்கிய நடுத்தர குடியிருப்புகளை கட்டும் நிறுவனங்கள்.  அடுத்து, 50 மற்றும் அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் வீடுகள் அடங்கிய பெரிய திட்டங்களை செயல் படுத்தும் நிறுவனங்கள் என மூன்று வகைகள் உள்ளன.
           அதிக வீடுகள் உள்ள பெரிய திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனங்களில் குறைந்த விலை வீடுகள் கட்டுவோர், ஆடம்பர வீடுகள் கட்டுவோர் என இரு வகை உண்டு.  இது போன்ற வேறுபாடுகளை புரிந்து புதிய வீட்டை யாரிடம் இருந்து வாங்குவது என்பதை தீர்மானிக்க வேண்டும்.
           இதில், சிறிய திட்டங்களை மேற்கொள்ளும் நிறுவனங்களின் திட்டங்களில் உங்களுக்கு கேள்விகள் கேட்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும்.  கட்டடத்தில் எதாவது பழுது என்றால் அதை சரி செய்து தர வேண்டும் என்று நீங்கள் நேரடியா பில்டரை அணுகி கேட்க முடியும்.
           அதே நேரத்தில் பெரிய திட்டங்களை மேற்கொள்ளும் நிறுவனங்களிடம் நேரடி கேள்விகளுக்கான வாய்ப்புகள் மிக குறைவு.  கட்டுமான நிறுவன உரிமையாளருடன் நேரடி சந்திப்புக்கே வாய்ப்பு இருக்காது.  இத்தகைய நிறுவனங்கள் கார்ப்பரேட் நிலையில் செயல்படுவதால், கட்டுமான நிறுவனம் சார்பில் விற்பனை முகவர் தான் பல்வேறு விஷயங்கள் குறித்து முடிவு செய்வர்.  இதில் கட்டுமான திட்டத்தில் குறைபாடு இருப்பதாக நீங்கள் புகார் கூறினால் அதற்கு தீர்வு கிடைப்பதற்கு தாமதம் ஏற்படும்.
           ஆனால், சிறிய, நடுத்தர திட்டங்களுக்கான நிறுவனங்களை பொறுத்தவரை பிரச்னைகள் ஏற்பட்டாலும், அதில் தீர்வை நோக்கி செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.  சிறிய திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனங்கள் கட்டுமான பணியில் காட்டும் கவனத்தைவிட பெரிய திட்டங்களில் நிறுவனங்களின் நேரடி கண்காணிப்பு குறைவாகவே இருக்கும்.
           எனவே, புதிய வீட்டை எத்தகைய நிறுவனத்திடம் வாங்குவது என்பதில் இது போன்ற விஷயங்களையும் கவனிக்க வேண்டும் என்கின்றனர் கட்டுமான வல்லுனர்கள். 

Tuesday, November 14, 2023

வீட்டின் விலையில் வரிகளுக்காக சேர்க்கப்படும் தொகைகளை விசாரிப்பது அவசியம்!

 வீட்டின் விலையில் வரிகளுக்காக சேர்க்கப்படும் தொகைகளை விசாரிப்பது அவசியம்!

புதிதாக வீடு வாங்கும் போது அதற்கான விலை குறித்து பல்வேறு தகவல்களை விசாரிப்பது அவசியம்.  பொதுவாக, சதுர அடி அடிப்படையில் கட்டுமான நிறுவனம் கூறும் விலையின் அடிப்படையிலேயே விற்பனைக்கான பேச்சு நடத்தப்படும்.
       ஆனால், கட்டுமான நிறுவனம் தெரிவிக்கும் விலையின் உள்ளடக்க விபரத்தை வீடு வாங்குவோர் தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம்.  ஒரு சதுர அடி இவ்வளவு என்று கட்டுமான நிறுவனம் கூறும் நிலையில், அதை இருவேறு நிலைகளில் பிரித்துப்பார்க்க வேண்டும்.
        வீட்டின் விலை என்பதில், 1 சதுர அடிக்கான தொகையில் நிலத்தின் பங்கு, கட்டுமான செலவு ஆகியவை அடங்கி இருக்கும்.  இதற்கு அப்பால், சதுர அடிக்கான விலையில், வரிகள் வகையில் சில தொகைகள் சேர்க்கப்படும்.
        பெரும்பாலான கட்டுமான நிறுவனங்கள் வீட்டின் மொத்த விலையில் கட்டுமான அனுமதி கட்டணம், கட்டுமான பொருட்கள் தொடர்பான வரித்தொகைகளை சேர்த்து விடுகின்றன.  குறிப்பாக, கட்டுமான பொருட்கள் செலவுத் தொகையில் அதற்கான வரியும் உள்ளடக்கியதாக இருக்கும்.
         ஆனால், வேண்டுமென்றே சில நிறுவனங்கள் வரி உள்ளடக்கிய கட்டுமான பொருட்கள் செலவு தொகையுடன் தனியாக வரி தொகையை சேர்த்து கூடுதல் தொகையை வசூலிக்கின்றன.
         ஜி.எஸ்.டி., வரி சீரமைப்புக்கு பின், கட்டுமான பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி., வரியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.  இதில் வீடு விற்பனைக்கான ஜி.எஸ்.டி., வரி தனியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  அதே நேரம் கட்டுமான பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி., வரி தனியாக உள்ளது.  இதில் கட்டுமான நிலையில் உள்ள வீட்டின் விற்பனைக்கு மட்டுமே ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்படும்.  ஆனால், சில கட்டுமான நிறுவனங்கள் மக்களின் அறியாமையை பயன்படுத்தி, கட்டி முடிக்கப்பட்ட வீட்டிற்கும் ஜி.எஸ்.டி., வரி வசூலிக்கின்றன.  இதை வீடு வாங்குவோர் தெளிவாக விசாரிக்க வேண்டும்.
        வீடு வாங்கும் நிலையில் அதற்கான விலையில் உள்ளடக்கமாக உள்ள வரி தொகை எவ்வளவு, மொத்த விலையில் தனியாக வசூலிக்கப்படும் வரித் தொகை எவ்வளவு என்பதை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.
        இதில் போதுமான அளவுக்கு மக்கள் விழிப்புடன் இருப்பது அவசியம் என்கின்றனர் கட்டுமான வல்லுனர்கள்.   


Thursday, November 9, 2023

கிரைய பத்திரத்தை விரிவாக எழுதுவதில் தயக்கம் வருவது ஏன்?

 கிரைய பத்திரத்தை விரிவாக எழுதுவதில் தயக்கம் வருவது ஏன்?

வீடு, மனை போன்ற சொத்துக்களை வாங்குவோர், அதற்கான கிரைய பத்திரத்தை தயாரிப்பதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.  பெரும்பாலும், முந்தைய  பத்திரத்தில் உள்ள விபரங்கள் அப்படியே புதிய கிரைய பத்திரத்தில் சேர்க்கப்படும்.
             இதில் தாய் பத்திரத்தில் இருக்கும் விபரங்கள் அந்த பத்திரம் எழுதப்பட்ட சமயத்து நிலவரம்.  அந்த நிலவரம் தற்போது என்னவாக மாறியிருக்கிறது என்பதை புதிய கிரைய பத்திரத்தில் சேர்க்க வேண்டியது அவசியம்.  குறிப்பாக, கிரைய பத்திரம் எழுதுவதில் பொதுவாக உள்ள ஒரு நடைமுறையை முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும்.  அதில், முதலில் சொத்து வாங்குவோர் பெயர், முகவரி, அடையாள சான்று எண் ஆகிய விபரங்களை துல்லியமாக குறிப்பிட வேண்டும்.
            அதன் பின், எழுதி கொடுப்பவர் என்ற அடிப்படையில் விற்பவரின் பெயர், முகவரி, அடையாள சான்று  விபரங்கள் துல்லியமாக குறிப்பிடப்பட வேண்டும்.  இதையடுத்து, எழுதி கொடுக்கப்படும் சொத்து குறித்த விபரத்தை விளக்க வேண்டும்.
          இந்த இடத்தில் தான் பலரும் ஒரே மாதிரியான தவறை செய்வதாக ஆவண எழுத்தர்கள், சார்-பதிவாளர்கள் கூறுகின்றனர்.  இங்கு, அந்த சொத்து எந்த சார்-பதிவாளர் அலுவலகத்தில் எப்போது, என்ன எண்ணில் கடைசியாக பதிவானது என்று குறிப்பிடப்படும்.  இவ்வாறு, எங்கள் பெயருக்கு வந்த சொத்தை வில்லங்கம் எதுவும் இன்றி, இன்ன விலைக்கு, இன்னாருக்கு கிரையம் கொடுப்பதாக குறிப்பிடப்படும்.
          ஆனால், இங்கு சொத்து எங்கு அமைந்துள்ளது, யாரிடம் இருந்து வாங்கப்பட்டது என்பது போன்ற தகவல்கள் தவிர்க்கப்படுகிறது.  பத்திரத்தில் ஷெட்யூல் பகுதியில் சொத்து குறித்த விபரங்கள் முழுமையாக இடம் பெரும் நிலையில் ஒவ்வொரு இடத்திலும் இப்படி குறிப்பிட வேண்டுமா என்ற கேள்வி எழும்.  பத்திரம் எழுதும் போது, இன்னாரிடம் இருந்து, இன்ன வகை பத்திரம் வாயிலாக, இந்த சொத்து எங்களுக்கு வந்தது என்பதை விற்பவரின் வாக்கு மூலமாக பதிவு செய்ய வேண்டும்.     
         பத்திரத்தில் கூடுதலாக சில வரிகள் ஆகும் என்பதற்காக, இது போன்ற விஷயங்களை தவிர்ப்பது பிற்காலத்தில் புதிய பிரச்னைகளுக்கு வழிவகுத்து விடும்.  மேலும், பத்திரம் எழுதும் போது, கூடுதலாக சில பக்கங்கள் வந்துவிடும் என்று அதில் சிக்கனம் பார்க்க நினைக்காதீர்.
        உங்களுக்கான கிரையபத்திரத்தில், சொத்தின் முன் வரலாறு முறையாக இடம் பெற வேண்டியது அவசியம்.  குறிப்பாக, முந்தைய பத்திரப்பதிவு விபரங்கள் குறிப்பிடப்படும் இடங்களில், பட்டா எண் விபரங்களையும் சேர்ப்பது நல்லது.  எனவே, கிரைய பத்திரம் தயாரிப்பதில் முறையாக விழிப்புடன் செயல்பட வேண்டும்.  அப்போதுதான் எதிர்காலத்தில் புதிய வில்லங்கம் எதுவும் இல்லாமல் பார்த்துக்கொள்ள முடியும் என்கின்றனர் சார்-பதிவாளர்கள்.    

Wednesday, November 8, 2023

அடுக்குமாடி குடியிருப்புகளில் பார்க்கிங் ஸ்லாட்டை வாடகைக்கு விடுவது சரியா?

 அடுக்குமாடி குடியிருப்புகளில் பார்க்கிங் ஸ்லாட்டை வாடகைக்கு விடுவது சரியா?
நகர், ஊரமைப்பு துறை வகுத்துள்ள விதிகளின்படி, அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் போது, வீட்டின் அளவு அடிப்படையில் கார் நிறுத்துமிடங்கள் ஏற்படுத்த வேண்டும்.  இதில் பெரும்பாலான கட்டுமான நிறுவனங்கள் முறையாக செயல்பட விரும்புகின்றன.
அதாவது விதிப்படி கார் நிறுத்துமிடங்கள் ஏற்படுத்தி தரப் படும் என்றாலும், அதற்கு ஒரு குறிப்பிட்ட தொகை வீட்டின் விலையில் சேர்த்து வாங்கப்படுகிறது.  இதனால், அடுக்குமாடி திட்டங்களில் வீடு வாங்குவோர், கார் நிறுத்துமிடங்களையும் சேர்த்து வாங்குகின்றனர்.
        சட்டப்படி கார் நிறுத்துமிடத்துக்கு தனியாக கட்டணம் வசூலிக்க கூடாது 
என்று கூறப்பட்டாலும், கட்டுமான நிறுவனங்கள் இதை கண்டு கொள்வதில்லை.  இதில் சில இடங்களில் வீடுகளுக்கு கார் நிறுத்துமிடங்கள் முறையாக வழங்கப்பட்டு இருக்கும்.
        ஆனால், வீடு வாங்கிய நபர் கார் வைத்து இருக்க மாட்டார்.  அத்தகைய சூழலில், பணம் செலுத்தி வாங்கிய கார் நிறுத்துமிடங்களை என்ன செய்வது என்பதில் குழப்பம் ஏற்படுகிறது.
    அதே நேரம், சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட கார்களை வைத்து இருக்கலாம், கார் நிறுத்துமிடம் இன்றி வீடு வாங்கி இருக்கலாம்.  இந்த இரண்டு நிலையில் உள்ளவர்களும் எதாவது ஒரு புள்ளியில் ஒன்று சேரும் சூழல் உருவாகிறது.
        இதில் சமீப காலமாக, பயன்பாடு இல்லாத கார் நிறுத்துமிடங்களை வாடகைக்கு விடும் வழக்கம் அதிகரித்துள்ளது.  இவ்வாறு கார் நிறுத்துமிடங்களை வாடகைக்கு விடுவது தொடர்பாக சட்ட வழிமுறைகள் எதுவும் இல்லை.
        வீட்டை வாடகைக்கு விடுவது போன்று கார் நிறுத்துமிடத்தை வாடகைக்கு விடுவதற்கான வழிமுறைகளை தெளிவுபடுத்த அரசின் தலையீடு அவசியம்.  ஒரு குடியிருப்பில் இருப்பவர், அதிலேயே வசிக்கும் இன்னோரு நபருக்கு கார் நிறுத்துமிடத்தை வாடகைக்கு விடும் வரை பிரச்னை இல்லை. 
       வெளியாருக்கு வாடகைக்கு விடும் நிலையில், பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகள் ஏற்படும்.  அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர் சங்கங்கள் இதில் எப்படி செயல்படுவது என்பதிலும் குழப்பம் ஏற்படுகிறது.
        எனவே, தமிழக அரசு கார் நிறுத்துமிடங்களை வாடகைக்கு விடுவது தொடர்பான நடைமுறைகளை வகுக்க முன்வர வேண்டும்.  அபார்ட்மென்ட் உரிமையாளர்கள் பாதுகாப்பு சட்டத்தில் இதற்கான வழிமுறைகளை தெளிவாக்க வேண்டும் என்கின்றனர் கட்டுமானத்துறை வல்லுனர்கள்.

Tips every luxury homebuyer should know

 Tips every luxury homebuyer should know
Here’s a checklist to make an informed decision while purchasing a luxury property
     Purchasing any property requires a lot of thought and planning to ensure that the purchase is the right fit for an individual’s lifestyle.  So, it is imperative that customers carefully investigate some factors before investing in a luxury property.
Purpose of the property
Are you looking for a place to live permanently, or are you looking to rent it out for a steady income?  Depending on your goals, you may have different preferences when it comes to the type of property you choose.
The right location
The location of the property is also an important factor to consider, as people seek natural open spaces, magnificent sea views, and greenery.  Luxury properties are often located in posh areas, so it is important to research the surrounding area to make sure it meets your needs.  Consider the local amenities, such as commute connectivity, schools, hospitals, and shopping centres, and make sure the neighbourhood is safe.
RERA registration
RERA is the governing body responsible for regulating and monitoring real estate projects, and it is important to ensure that the property you are considering is registered with them.
Check property features
These properties often come with a variety of amenities, such as swimming pools, spas, gyms, etc.  Make sure these features are well-maintained and in good condition.
Brand value is essential
A trusted developer who has brand value is also an important factor to consider while purchasing a luxury property.  A property with a well-established brand name can often command a higher price than a lesser-known property.
        Whether it’s for increased comfort and convenience, added security, or the potential for a great investment, luxury property is a good investment.  In addition, investing in a luxury property is also a great way to diversify your portfolio.

Electric vehicle charging stations: An added benefit or a necessity?

  Electric vehicle charging stations: An added benefit or a necessity? With an increased demand for electric vehicles ( EV s ) , the demand ...