Thursday, November 9, 2023

கிரைய பத்திரத்தை விரிவாக எழுதுவதில் தயக்கம் வருவது ஏன்?

 கிரைய பத்திரத்தை விரிவாக எழுதுவதில் தயக்கம் வருவது ஏன்?

வீடு, மனை போன்ற சொத்துக்களை வாங்குவோர், அதற்கான கிரைய பத்திரத்தை தயாரிப்பதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.  பெரும்பாலும், முந்தைய  பத்திரத்தில் உள்ள விபரங்கள் அப்படியே புதிய கிரைய பத்திரத்தில் சேர்க்கப்படும்.
             இதில் தாய் பத்திரத்தில் இருக்கும் விபரங்கள் அந்த பத்திரம் எழுதப்பட்ட சமயத்து நிலவரம்.  அந்த நிலவரம் தற்போது என்னவாக மாறியிருக்கிறது என்பதை புதிய கிரைய பத்திரத்தில் சேர்க்க வேண்டியது அவசியம்.  குறிப்பாக, கிரைய பத்திரம் எழுதுவதில் பொதுவாக உள்ள ஒரு நடைமுறையை முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும்.  அதில், முதலில் சொத்து வாங்குவோர் பெயர், முகவரி, அடையாள சான்று எண் ஆகிய விபரங்களை துல்லியமாக குறிப்பிட வேண்டும்.
            அதன் பின், எழுதி கொடுப்பவர் என்ற அடிப்படையில் விற்பவரின் பெயர், முகவரி, அடையாள சான்று  விபரங்கள் துல்லியமாக குறிப்பிடப்பட வேண்டும்.  இதையடுத்து, எழுதி கொடுக்கப்படும் சொத்து குறித்த விபரத்தை விளக்க வேண்டும்.
          இந்த இடத்தில் தான் பலரும் ஒரே மாதிரியான தவறை செய்வதாக ஆவண எழுத்தர்கள், சார்-பதிவாளர்கள் கூறுகின்றனர்.  இங்கு, அந்த சொத்து எந்த சார்-பதிவாளர் அலுவலகத்தில் எப்போது, என்ன எண்ணில் கடைசியாக பதிவானது என்று குறிப்பிடப்படும்.  இவ்வாறு, எங்கள் பெயருக்கு வந்த சொத்தை வில்லங்கம் எதுவும் இன்றி, இன்ன விலைக்கு, இன்னாருக்கு கிரையம் கொடுப்பதாக குறிப்பிடப்படும்.
          ஆனால், இங்கு சொத்து எங்கு அமைந்துள்ளது, யாரிடம் இருந்து வாங்கப்பட்டது என்பது போன்ற தகவல்கள் தவிர்க்கப்படுகிறது.  பத்திரத்தில் ஷெட்யூல் பகுதியில் சொத்து குறித்த விபரங்கள் முழுமையாக இடம் பெரும் நிலையில் ஒவ்வொரு இடத்திலும் இப்படி குறிப்பிட வேண்டுமா என்ற கேள்வி எழும்.  பத்திரம் எழுதும் போது, இன்னாரிடம் இருந்து, இன்ன வகை பத்திரம் வாயிலாக, இந்த சொத்து எங்களுக்கு வந்தது என்பதை விற்பவரின் வாக்கு மூலமாக பதிவு செய்ய வேண்டும்.     
         பத்திரத்தில் கூடுதலாக சில வரிகள் ஆகும் என்பதற்காக, இது போன்ற விஷயங்களை தவிர்ப்பது பிற்காலத்தில் புதிய பிரச்னைகளுக்கு வழிவகுத்து விடும்.  மேலும், பத்திரம் எழுதும் போது, கூடுதலாக சில பக்கங்கள் வந்துவிடும் என்று அதில் சிக்கனம் பார்க்க நினைக்காதீர்.
        உங்களுக்கான கிரையபத்திரத்தில், சொத்தின் முன் வரலாறு முறையாக இடம் பெற வேண்டியது அவசியம்.  குறிப்பாக, முந்தைய பத்திரப்பதிவு விபரங்கள் குறிப்பிடப்படும் இடங்களில், பட்டா எண் விபரங்களையும் சேர்ப்பது நல்லது.  எனவே, கிரைய பத்திரம் தயாரிப்பதில் முறையாக விழிப்புடன் செயல்பட வேண்டும்.  அப்போதுதான் எதிர்காலத்தில் புதிய வில்லங்கம் எதுவும் இல்லாமல் பார்த்துக்கொள்ள முடியும் என்கின்றனர் சார்-பதிவாளர்கள்.    

No comments:

Post a Comment

புதிய வீட்டுக்கு அலங்கார மின் விளக்குகளை தேர்வு செய்வதில் கவனிக்க

  புதிய வீட்டுக்கு அலங்கார மின் விளக்குகளை தேர்வு செய்வதில் கவனிக்க புதிதாக வீடு கட்டும் போது அதன் ஒவ்வொரு பாகமும் எப்படி இருக்க வேண்டும் என...