Monday, September 11, 2023

வீடு, மனை வாங்குவோர் உரிமையாளருக்கு பணத்தை கொடுப்பதில் கவனம் தேவை!

 வீடு, மனை வாங்குவோர் உரிமையாளருக்கு பணத்தை கொடுப்பதில் கவனம் தேவை!

       சொத்து வாங்குவது என்பது மிகப் பெரிய சாதனை.  அது வீடாக, நிலமாக, மனையாக எப்படியிருந்தாலும், நமக்கான பெருமையும் சாதனையுமாகும்.  இதில் சொத்துக் குறித்தான ஆவணங்கள் மற்றும் வில்லங்

கம் தொடர்பான, பல்வேறு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

        ஆரம்பக் கட்ட பேச்சிலிருந்து, ஆவணங்கள் சரி பார்ப்பதிலிருந்து பதிவு செய்யும் காலம் வரை கவனமாய் இருக்க வேண்டியது அவசியம்.


        குறிப்பாக, விலையை பேசி முடிவு செய்வதில், எவ்வித குழப்பத்துக்கும் இடம் கொடுக்க கூடாது.  சொத்தின் சந்தை மதிப்பு, நாம் பேசியிருக்கும் மதிப்பு என எதிலும் சுணக்கம் இருத்தல் கூடாது.


         மொத்தத்தில், 50 சதவீத அளவுக்கே உங்களுக்கு உடன்பாடு இருக்கும் நிலையில், விலையை முடிவு செய்து முன்பணம் கொடுப்பதில் எவ்வித பயனும் இல்லை.


        விலையை முடிவு செய்த நிலையில், அதை உறுதிபடுத்த விற்பனை ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும்.  இந்த விற்பனை ஒப்பந்தம் என்பது சொத்து விற்பவரிடமிருந்து சொத்துக்கான உரிமையும் சொத்து வாங்குபவரிடத்திற்கு மாற்றப்பட்டதற்கான முக்கியமான ஆவணம் ஆகும்.


         இந்த சமயத்தில் முடிவு செய்யப்பட்ட விலை எவ்வளவு, அதில் முன்பணம் எவ்வளவு கொடுக்கப்பட்டது என்ற விபரங்களை ஒப்பந்தத்தில் சேர்க்க வேண்டும்.


         அத்துடன், கிரைய பத்திரம் எப்போது பதிவு செய்வது என்பதையும், விலையாக பேசப்பட்ட தொகை எப்படி, எப்போது கொடுக்கப்படும் என்பதையும் ஒப்பந்தத்தில் தெளிவாக குறிப்பிட வேண்டும்.  இவ்வாறு, குறிப்பிட்டபடி, கிரைய பத்திரத்தை பதிவு செய்ய வேண்டும்.


          இதில், கிரைய பத்திரம் பதிவுக்கு முன் முழு தொகையையும் கொடுப்பது சரியா என்பதை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.  பொதுவாக, பத்திரப்பதிவின் போது, சார்-பதிவாளர், விற்பவரிடம், ஆவணத்தில் குறிப்பிட்டுள்ள தொகையை வாங்கி விட்டீர்களா என்று விசாரிக்க வேண்டும்.

         

 பல இடங்களில், இந்த விஷயத்தில், சார்-பதிவாளர்கள் தலையிடாமல் ஒதுங்கி விடுகின்றனர்.  பத்திரத்தில் குறிப்பிட்ட தொகை கைமாறிய நிலையிலேயே பதிவு செய்ய வேண்டும்.


           ஆனால், சில இடங்களில் பத்திரம் பதிவுக்கு ஏற்கப்பட்ட பின் தான் பணம் கைமாறுகிறது.  இதில், சார்-பதிவாளர்கள் உரிமையாளருக்கு சொத்துக்கான பணம் வந்ததா இல்லையா என்பதில் கவனம் செலுத்துவதில்லை.


           விலையாக பேசப் பட்ட தொகை முழுதும் கைமாறிய நிலையிலேயே, பத்திரம் பதிவுக்கு ஏற்கப்பட வேண்டும்.  பணம் கிடைக்காத நிலையில், பத்திரம் பதிவு செய்யப்படுவது பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

                

             அதே நேரத்தில் பணம் வாங்கிக் கொண்டவர், பத்திரப்பதிவுக்கு ஒத்துழைக்க வேண்டும்.  அவர் கடைசி நிமிடத்தில் ஏதாவது பிரச்னை செய்தால், அது சொத்து வாங்குவோருக்கு சிக்கலாகி விடும்.


             எனவே, இதில் ஒப்பந்தம் எழுதி, அதன் அடிப்படையில் விற்பவரும், வாங்குபவரும் செயல்படுவது அவசியம்.


             இழப்பீடு விதியும் இதில் சேர்க்கப்பட வேண்டும்.  அதாவது, சொத்தின் உரிமை தொடர்பான பிரச்னையோ அல்லது பண இழப்போ ஏற்படும் வகையிலான சேதங்களுக்கு, சொத்து விற்பனையாளர், அதை வாங்குபவருக்கு பணம் செலுத்துவேன் என அளிக்கும் உறுதி என்கின்றனர் சார்-பதிவாளர்கள்.


தெளிவான செயல்திட்டம் இல்லாமல் வீடு வாங்க போகாதீர்கள்!

 தெளிவான செயல்திட்டம் இல்லாமல் வீடு வாங்க போகாதீர்கள்!

                          சொந்தமாக வீடு, மனை வாங்க வேண்டும் என்று நம்மில் பலரும் ஆசைப்படுகிறோம்.  பெரும்பாலான மக்களுக்கு வாழ்நாள் லட்சியமாகவும் இது அமைகிறது.

                இதற்காக, நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்த தெளிவான செயல் திட்டம் இருக்க வேண்டும்.  வீடு, மனை வாங்க நீங்கள் முயற்சிக்கும்போது, ஏராளமானோர் ஆலோசனை கூறுவர்.

                குறிப்பாக, நண்பர்கள், உறவினர்கள், புரோக்கர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆலோசனையை அள்ளி தெளிப்பார்கள்.  வீடு, மனை வாங்குவது என்பது உங்கள் அளவில் புதிய நடவடிக்கையாக இருக்கலாம்.

                ஆனால், உங்களுக்கு முன் பலர் சென்ற பாதைதான் அது என்பதை கவனத்தில் வைத்து செயல்படுவது நல்லது.  ஏனெனில், உங்களுக்கு முன் அந்த பாதையில் சென்றவர்களின் அனுபவங்கள் தான் உங்கள் முயற்சியில் தவறுகளை தவிர்க்க உதவும்.

                இதில் மற்றவர்களிடம் ஆலோசனை கேட்பதில் எவ்வித தயக்கமும் தேவையில்லை.  வீடு வாங்குவதா அல்லது மனை வாங்குவதா என்பதை முதலில் தீர்மானம் செய்யுங்கள்.  அதன் பின் எந்த இடத்தில சொத்து வாங்குவது என்பதில் தெளிவான முடிவு எடுங்கள்.  இதில் வெளியாரின் ஆலோசனையை கேட்பதற்கு முன், குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளுங்கள்.

                உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களின் கல்வி, வேலை போன்ற தேவைகளுக்கு ஏற்ற பகுதியை தேர்வு செய்வது நல்லது.  அதிலும், அவசர காலத்தில் மருத்துவ உதவி, போக்குவரத்து வசதி போன்றவை சரியான முறையில் இருக்கும் பகுதியை தேர்ந்தெடுங்கள்.

                இதன் பின், வெளியாரின் ஆலோசனையை கேட்கும் போது, நீங்கள் தேர்ந்தெடுக்கும் பகுதியில் காணப்படும் பிரச்னைகள் குறித்து விசாரியுங்கள்.  இதில் வளர்ச்சி திட்டங்களை சாதகமாகவும் பார்க்கலாம், பாதகமாகவும் பார்க்கலாம்.

                இந்த விஷயத்தில் மிகுந்த தெளிவுடன் செயல்படுவது அவசியம்.  இது போன்ற ஆலோசனைகள் அடிப்படையில் தெளிவான செயல்திட்டம் வகுக்காமல் வீடு தேடும் பணியில் இறங்காதீர்கள் என்கின்றனர் கட்டுமான வல்லுனர்கள்.


Saturday, September 9, 2023

மனை அளவை சரி பார்க்காமல் கட்டுமான பணிகளை துவங்காதீர்!

 மனை அளவை சரி பார்க்காமல் கட்டுமான பணிகளை துவங்காதீர்!

        புதிதாக மனை வாங்கும் பணிகள் முடிந்த நிலையில் அதில் வீடு கட்ட வேண்டும் என்ற ஆவல் அனைவருக்கும் இருக்கும்.  இதற்கு ஆவல் இருந்தால் மட்டும் போதுமா என்றால் நிச்சயம் போதாது என்றுதான் பதில் வரும்.


        வீடு கட்ட மனை இருந்தால் போதும் என்று தானே நினைத்து இருந்தோம்.  இதற்கு மேல் வேறு என்ன தேவைபட போகிறது என்று நீங்கள் நினைக்கலாம்.


         நிலங்கள் மனைகளாக பிரிக்கப்படும் நிலையில் சரியான விகிதத்தில் எல்லைகள் வரையறுக்கப்பட்டு இருக்க வேண்டும்.  பொதுவாக, சீரான சதுரம் அல்லது செவ்வகத்தில் மனைகள் அமைந்து இருக்க வேண்டும்.  இதில் நகர், ஊரமைப்பு துறை விதிகளை சரியாக கடைப்பிடித்து பிரிக்கப்பட்ட மனைகள் எனில் அது பெரும்பாலும் சீரான செவ்வகத்தில் இருக்க வேண்டும்.  மனை வாங்கும் நிலையிலேயே அதன் நீள, அகலம் சீராக உள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.


        இப்படி சீரான அளவுகளுடன் இருக்கும் மனைகளில் வீடு கட்டும் பணிகளை உடனடியாக துவங்குவதில் எவ்வித சிக்கலும் இல்லை.  ஆனால், சில இடங்களில் சீரற்ற அளவுகளுடன் மனைகள் இருக்கும்.


         அதாவது.  முகப்பில், 20 அடி அகலம் இருக்கும், பின்னால், 15 அடி அகலம் இருக்கும், அதே போன்று, இடப்பக்கம், 40 அடி நீளம் இருக்கும், வலது பக்கத்தில் 45 அடி நீளம் இருக்கலாம்.


         இது இடத்துக்கு இடம் வேறுபடும்.  இத்தகைய வேறுபாடுகள் உள்ள மனைகளில் வீடு கட்டும் முன், சில அடிப்படை பணிகளை மேற்கொள்ள வேண்டும்.  இந்த அளவுகளை நாம் சரி செய்ய முடியாது.


          அதே நேரத்தில் இதற்குள் வீடு கட்டுவதற்கான பகுதியை சீரான அளவுகளுடன் தேர்ந்தெடுக்க முடியும்.  இப்படி சரியான பகுதியை தேர்வு செய்து அதில் கட்டுமான பணிகளை துவக்கலாம்.


          அப்போது தான் கட்டடத்தின் அளவுகள் சீரான வடிவத்துக்குள் அடங்கும்.  கட்டடம் பார்ப்பதற்கு சரியான அமைப்பில் இருக்கும் என்கின்றனர் கட்டட வடிவமைப்பாளர்கள்.


வீட்டுமனை வாங்குவோர் நில அளவை ரீதியாக விசாரிக்க வேண்டிய விஷயங்கள்!

 வீட்டுமனை வாங்குவோர் நில அளவை ரீதியாக விசாரிக்க வேண்டிய விஷயங்கள்!

             

                வீட்டுமனை வாங்கும்போது அது தொடர்பான பத்திரங்களில் எவ்வித விளக்கமும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.  இதற்காக சட்ட ரீதியாக ஆவணங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.


                  அதே போன்று, விற்பனைக்கு வரும் மனை தொடர்பான வருவாய் 

ஆவணங்களையும் முழுமையான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.  இதில் பல இடங்களில் முழுமையான ஆய்வு நடப்பதில்லை.


                   ஒரு நிலம் மனையாக தற்போது விற்கப்படுகிறது என்றால், அது இதற்கு முன் என்ன வகைப்பாட்டில் இருந்தது என்பதை கவனிக்க வேண்டும்.  குறிப்பாக நகர், ஊரமைப்பு சட்ட விதிகளுக்கு உட்பட்டு வகைப்பாடு மாற்றி இருக்கிறார்களா என்பதை தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.


                   குறிப்பாக, அந்த நிலம் இதற்கு முன் கடைசியாக எப்போது சர்வே செய்யப்பட்டது.  அப்போது ஒதுக்கப்பட்ட சர்வே எண் என்ன என்பதை விசாரிக்க வேண்டும்.  அதற்கு முன் அந்த நிலத்துக்கு ஒதுக்கப்பட்ட சர்வே எண் குறித்து விசாரிப்பது நல்லது.


                    நில அளவை அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வரைபடத்தில், அந்த நிலம் என்னவாக வகைபடுத்தப்பட்டது என்பதையும் அதில் தற்போது என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதையும் கவனிப்பது அவசியம்.  தற்போதைய உரிமையாளர் வாங்கும்போது அந்த நிலம் என்ன வகைபாட்டில் இருந்தது, அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்று பாருங்கள்.


                    பல சமயங்களில் விவசாய நிலமாக வாங்கப்பட்டு இருக்கும், விற்கும்போது, அது மனையாக தெரிவிக்கப்படும்.  இதில் வகைபாடு மாற்றத்துக்கான நடவடிக்கைகள் தொடர்பான ஆவணங்கள் இருக்க வேண்டும்.


                     தனியார் நிறுவனங்கள் விற்கும் மனைகளிலும் இது போன்ற விபரங்களை கேட்டு வாங்கி பார்ப்பது நல்லது.  பல நிறுவனங்கள் இதில் ஆர்வம் காட்டுவதில்லை.


                     இருப்பினும், வீடு வாங்குவோர் முடிந்தவரை வளைந்து கொடுக்காமல் கறாராக சம்பந்தப்பட்ட ஆவணங்களை கேட்டு வாங்கி சரிபார்ப்பது அவசியம்.  நம்பகமாக நிறுவனம், தெரிந்த நிர்வாகிகள், கூடுதல் சலுகை கிடைக்கும் என்பதற்காக சரிபார்ப்பு விஷயத்தில் சமரசம் செய்துக்கொள்ளாதீர் என்கின்றனர் வருவாய் துறை அதிகாரிகள்.


Friday, September 8, 2023

சொத்து பாகப்பிரிவினையில் ஏற்படும் இயல்பான சட்ட சிக்கல்கள்!

 சொத்து பாகப்பிரிவினையில் ஏற்படும் இயல்பான சட்ட சிக்கல்கள்!


          பொதுவாக இந்து குடும்பங்களில் பரம்பரை சொத்துக்களை பாகப்பிரிவினை செய்வது வழக்கமான ஒன்றாக உள்ளது.  மக்களின் அலட்சியம் காரணமாக இதில் பல்வேறு சட்ட சிக்கல்கள் ஏற்படுகின்றன.

          பாகப்பிரிவினை செய்வது என்பதில் பாரம்பரியமாக பல்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.  இருப்பினும் சட்டத்தால் சில வழிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.


          இந்த வழிமுறைகளை உணர்ந்து வாரிசுகள் தங்களுக்குள் பாகப்பிரிவினை செய்துக்கொள்ள வேண்டும்.  இதில் எத்தகைய சொத்துக்கள் பாகப்பிரிவினைக்கு உட்படும் என்பதை மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.


          உயில் எழுதப்படாத அனைத்து சொத்துக்களையும் வாரிசுகள் தங்களுக்குள் பங்கிட்டுக்கொள்ளலாம் என்ற பொதுவான எண்ணம் உள்ளது.  தந்தை வழி சொத்துக்கள் மட்டுமே பாகப்பிரிவினைக்கு உட்படும்.


          தாயின் பெயரில் வாங்கப்பட்ட சொத்துக்கள் அவரின் தனிப்பட்ட சொத்துக்களாகிவிடும்.  தந்தையின் சொத்துக்களுக்கு வாரிசாகும் அனைவரும், தாயின் சொத்துக்கும் வாரிசு என்று கருத முடியாது.  இன்றைய சூழலில், தந்தை வழி சொத்திலும், அவர் சுயமாக சம்பாதித்ததா அல்லது பரம்பரை வழியாக அவர் பெயருக்கு வந்ததா என்பதை பார்க்க வேண்டும்.  தந்தையின் சுயசம்பாத்திய சொத்து எனில், அவரது மகன், மகள்கள் பாகப்பிரிவினை செய்து கொள்ளலாம்.


         அதே சமயம் பரம்பரை வழியில் வந்த சொத்து எனில், வேறு சிலரும் அதில் உரிமை கோர வாய்ப்பு இருக்கும்.  இதில் சொத்துக்கள் வாரிசுகளுக்கு சமமாக பங்கிடப்பட வேண்டும்.


          பங்கீடு செய்வதில் யாருக்காவது ஆட்சேபம் இருந்தால் அவர் நீதிமன்றத்தை அணுகலாம்.


         இது போன்ற வழக்குகளில் பல சமயங்களில் பாகப்பிரிவினை செல்லாது என்று அறிவிக்கப்படும் சூழல் ஏற்படுகிறது.  அதன் பின் அனைத்து வாரிசுகளும் ஒன்றாக பேசி பிரச்னையை தீர்க்க வேண்டும்.


         தேவைப்பட்டால், இது போன்ற பிரச்னைகளில் சமரச பணிகளுக்கு உரிய நபர்களை நீதிமன்றம் நியமிக்கலாம் என்கின்றனர் சட்ட வல்லுனர்கள்.  


அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களுக்கு பாதுகாவலர் நியமிப்பதில் எழும் சிக்கல்கள்!

 அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களுக்கு பாதுகாவலர் நியமிப்பதில் எழும் சிக்கல்கள்!



                     

                           தனி வீடு வாங்குவோர், அதில் பாதுகாப்பு, பராமரிப்பு உள்ளிட்ட விஷயங்களில் நேரடியாக கவனம் செலுத்த வேண்டும்.  நேரடியாக கவனிக்கும் போது இப்பணிக்கான முழு செலவும் உரிமையாளர் பொறுப்பில் வந்துவிடும்.  ஆனால், அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களில் பாதுகாப்பு, பராமரிப்பு விஷயங்களில் சங்கம் வாயிலாகவே நடவடிக்கை எடுக்க முடியும், தனிப்பட்ட முறையில் உங்கள் வீட்டுக்கான பாதுகாவலரை நீங்கள் நியமிக்க முடியாது.


                          அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களில் பாதுகாவலர்களை நியமிப்பதில் தனியார் பாதுகாவல் சேவை வழங்கும் நிறுவனங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.  இதில் எத்தகைய நிறுவனங்களை தேர்வு செய்வது என்பதில் கவனம் தேவை.


                          குறிப்பாக, உங்கள் குடியிருப்பின் மொத்த வருவாய், செலவுக்கான பட்ஜெட் அடிப்படையிலேயே இதை முடிவு செய்ய வேண்டும்.  உங்கள் வளாகத்துக்கு பட்ஜெட்அடிப்படையிலேயே பாதுகாவல் பாதுகாவல் நிறுவனங்களை தேர்ந்தெடுக்க வேண்டிய நெருக்கடி ஏற்படும்.


                          இதில் தொழிற்சாலைகள், அலுவலக வளாகங்கள் அளவுக்கு அதிக திறமை உள்ள பாதுகாவலர்களை பயன்படுத்த அனைவருக்கும் விருப்பம் இருக்கும்.  ஆனால், அதற்கு உங்கள் பட்ஜெட் இடம் கொடுக்க வேண்டும்.


                            குறைந்த செலவுக்கு ஆட்களை நியமித்தால், சேவையின் தரம் மோசமாக இருக்கும்.  இதனால், அபார்ட்மென்ட் வளாகத்துக்கு யார் வந்து செல்கின்றனர் என்பதை தெளிவாக கண்காணிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.


                          இன்னும் சில இடங்களில் நேரடி நியமனம் முறையில் பாதுகாவலர்களை அமர்த்துவது குறித்து சங்க நிர்வாகங்கள் பரிசீலிக்கின்றன.  இதில் பாதுகாவல் சேவை நிறுவன தலையீடு இருக்காது என்று நினைக்கின்றனர். 


                         ஆனால், பாதுகாவல் பணிக்கு வருவோரை தினமும் கண்காணிப்பதே சங்க நிர்வாகத்துக்கு தலைவலியை ஏற்படுத்தும்.  ஒவ்வொரு பாதுகாவலரும் பணிக்கு வருகிறாரா இல்லையா, திடீரென விடுப்பில் சென்றால் என்ன செய்வது என்பது உள்ளிட்ட விஷயங்கள் பெரிய தொல்லையாக அமையும்.


                          எனவே, அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு உரிய பாதுகாவல் நிறுவனங்களை சரியாக தேர்ந்தெடுக்க வேண்டியது உரிமையாளர்களின் பொறுப்பாக உள்ளது.  இதில் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்கின்றனர் கட்டுமான வல்லுனர்கள்.   


                            


                           

Thursday, September 7, 2023

ஆபத்தான தொழில்கள் நடக்கும் இடங்களில் வீடு, மனை வாங்காதீர்!

 ஆபத்தான தொழில்கள் நடக்கும் இடங்களில் வீடு, மனை வாங்காதீர்!



            பொதுவாக வீடு, மனை வாங்கும் போது அதற்காக நீங்கள் தேர்ந்தெடுக்கும் பகுதி குறித்த முழு விபரங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.  விற்பவர், தரகர்கள் வாய் வழியாக வரும் செய்திகளில் அவர்களது நோக்கம் பிரதானமாக இருக்கும்.


             எனவே, அதை அப்படியே ஏற்பது என்பதைவிட உண்மைநிலை என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.  உதாரணமாக ஒரு புதிய மனைப்பிரிவு, குடியிருப்பு திட்டம் குறித்து விசாரிக்கும் போது, விற்பனை நிறுவனங்கள் கூறுவதில் பெரும்பாலான விஷயங்கள் அவர்களுக்கு சாதகமான விஷயங்களாகவே இருக்கும்.


             இதை அப்படியே நம்பினால், வீடு, மனை வாங்குவோர் பல்வேறு சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும். குறிப்பாக, தொழிற்பேட்டை பக்கத்திலேயே மனைப்பிரிவு இருக்கிறது என்பார்கள்.


             நாமும் பரவாயில்லை, வேலைக்கு விரைவாக சென்று வரலாம் என்று நினைத்து வாங்கிவிடுவோம்.  அங்கு குடியேறிய பின் தான் தொழிற்பேட்டையில் இருந்து வரும் பிரச்னைகள் தெரியவரும்.


           குறிப்பாக, நீங்கள் வீடு வாங்கும் பகுதி எத்தகைய நிலையில் உள்ளது என்பதை தன்னிச்சையாக ஆய்வு செய்ய வேண்டும்.  அதிலும், அதன் அருகில் தொழில் நிறுவனங்கள் இருந்தால் அதன் தன்மை, மாசு ஏற்படுத்துமா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.


              சில இடங்களில், குடியிருப்பு பகுதியாக இருக்கும், ஆனால், வீட்டிலேயே வைத்து குறுந்தொழில் செய்வார்கள்.  இதில் எத்தகைய தொழில் நடக்கிறது என்பதை பார்க்க வேண்டும்.


             குறிப்பாக, அக்கம் பக்கத்து வீடுகளில் குறுந்தொழில்கள் நடக்கின்றன என்றால் அது குறித்த கூடுதல் ஆய்வு தேவை.  உள்ளூர் நுகர்வோரை சார்ந்த தொழில்கள் என்றால் அதில் எத்தகைய அச்சமும் தேவையில்லை.


              அதே நேரத்தில் பக்கத்து வீட்டில் நடக்கும் குறுந்தொழில் பெரிய நிறுவனங்களை சார்ந்தது என்றால், அதனால் மாசு ஏற்படுமா என்பதை ஆராய வேண்டும்.  இதில் தோல் தொழில், சாயத் தொழில், மருந்து தயாரிப்பு போன்ற தொழில்களில் வெளிப்படும் மாசு உடனடியாக தெரியாது.


            இது போன்ற விஷயங்களில், அக்கம் பக்கத்து வீட்டுக்காரரை வெளியேற்ற முடியாது.  எனவே, வீடு வாங்கும் நிலையிலேயே கவனமாக இருந்து இப்பகுதிகளில் குடியேறுவதை தவிர்ப்பது நல்லது என்கின்றனர் நகரமைப்பு வல்லுனர்கள்.  


Electric vehicle charging stations: An added benefit or a necessity?

  Electric vehicle charging stations: An added benefit or a necessity? With an increased demand for electric vehicles ( EV s ) , the demand ...