Monday, August 12, 2024

கட்டடத்தின் மொத்த சுமையை எப்போது எப்படி கணக்கிட வேண்டும்!

 கட்டடத்தின் மொத்த சுமையை எப்போது எப்படி கணக்கிட வேண்டும்!

ஒரு கட்டடம் கட்டப்படுகிறது என்றால், அதற்கான பணிகளை துவங்கும்முன், அதில் என்னென்ன வகையில் சுமை ஏற்படும் என்பதை கணக்கிட வேண்டும். கட்டடத்தின் மொத்த சுமை என்ன என்பதை துல்லியமாகக் கணக்கிட்டால்தான் அதைத் தாங்கும் வகையில் துாண்கள், பீம்களை வடிவமைக்க முடியும்.


பொதுவாக வீடு கட்டும்போது, நம்மிடம் உள்ள நிலத்தின் மொத்த பரப்பளவு என்ன அதில், எவ்வளவு பகுதியை பயன்படுத்த வேண்டும் என்று மக்கள் கணக்கிடுகின்றனர். இதன் அடிப்படையில் புதிய கட்டடத்துக்கான அடிப்படை கணக்கீடு அறிய கட்டட அமைப்பியல் பொறியாளர்களை அணுக வேண்டும்.


ஆனால், பெரும்பாலான மக்கள், கட்டுமானப் பணிகளை சிவில் பொறியாளரிடம் ஒப்படைத்தால் போதும் அவர் அனைத்தையும் பார்த்துக் கொள்வார் என்று இருக்கின்றனர். நீங்கள் தேர்வு செய்த சிவில் பொறியாளர், முறையாக பதிவு செய்த கட்டட அமைப்பியல் பொறியாளரின் வழிகாட்டுதல்களை பெற்றாரா என்பது யாருக்கும் தெரியாது.


இத்தகைய சூழலில், பல இடங்களில் சிவில் பொறியாளர்கள், கட்டட அமைப்பியல் பொறியாளர்களை பயன்படுத்துவதை தவிர்க்கின்றனர். நேரடியாக கட்டட வடிவமைப்பாளர் ஒருவரை அணுகி புதிய கட்டடத்துக்கான வரைபடத்தை தயாரிப்பது வாடிக்கையாக உள்ளது.


இவ்வாறு, நேரடியாக கட்டடத்துக்கான வரைபடம் தயாரிக்கும்போது, அதில் ஏற்படும் மொத்த சுமை என்ன, அதை தாங்கும் வகையில் துாண்கள் உள்ளதா என்பதை, உறுதி செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, புதிதாக வீடு கட்டுவோர், அதற்கான பணிகளை ஒப்பந்த அடிப்படையில் ஒப்படைக்கும்போது, கட்டட அமைப்பியல் பொறியாளர் அறிக்கை பெறுவது, மண் பரிசோதனை அறிக்கை பெறுவது உள்ளிட்ட பணிகளில் கவனமாக இருக்க வேண்டும்.


குறிப்பாக ஒரு கட்டடத்தில் கட்டுமான பாகங்களால் எவ்வளவு சுமை ஏற்படும் என்பதை துல்லியமாகக் கணக்கிட்டு, அதை தாங்கும் வகையில் அஸ்திவார பணிகளை திட்டமிட வேண்டும். பீம்கள், மேல்தளம், அதற்கு மேல் கட்டப்படும் அமைப்புகள் அடிப்படையில் சுமை அளவு என்ன என்பதை கணக்கிட வேண்டும்.


பெரும்பாலான இடங்களில் தற்போது கட்டப்படும் தரைதள கட்டடத்தின் மொத்த எடை அடிப்படையில் மட்டுமே கட்டடத்துக்கான சுமையை கணக்கிடுகின்றனர். ஆனால், எதிர்காலத்தில் கட்டப்படும் கூடுதல் அறைகள் காரணமாக ஏற்படும் சுமையை கட்டடத்தின் அஸ்திவாரம், துாண்கள் தாங்க முடியாத நிலை ஏற்படும்.


நீங்கள் கட்ட உத்தேசித்துள்ள கட்டடத்தின் மொத்த பரப்பளவு என்ன, எதிர்காலத்தில் கட்டப்பட உள்ள பகுதிகள் என்ன என்ற அடிப்படையில், அதில் ஏற்படும் சுமையை கணக்கிட வேண்டும். இத்துடன் பயன்பாடு அடிப்படையில் ஏற்படும் சுமையின் அளவையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் கட்டட அமைப்பியல் பொறியாளர்கள்.


Thursday, August 1, 2024

அடுக்குமாடி குடியிருப்புகளில் பாதுகாப்பு பணிகளில் கவனிக்க வேண்டியது!

 அடுக்குமாடி குடியிருப்புகளில் பாதுகாப்பு பணிகளில் கவனிக்க வேண்டியது!

தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்த வளாகங்களை பராமரிப்பது தொடர்பான பல்வேறு பிரச்னைகளும், அதற்கான தீர்வுகளும் மக்கள் மத்தியில் பேசு பொருளாக மாறி வருகிறது.


இன்றைய சூழலில், ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டால் அதன் பராமரிப்பு பொறுப்பு அங்கு வீடு வாங்கிய உரிமையாளர்களின் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அந்த சங்கம் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கான சட்ட ரீதியான வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.


இதுபோன்ற குடியிருப்புகளில் சங்க நிர்வாகங்களுக்கு, பாதுகாவல் பணிகள் மிக முக்கிய பொறுப்பாக உள்ளது. கேட்டட் கம்யூனிட்டி என்ற அடிப்படையில் கட்டப்படும் அடுக்குமாடிகுடியிருப்பு வளாகங்களில் வெளியார் வருவது தொடர்பான விஷயங்களில் மிக கவனமாக இருக்க வேண்டும்.


இதற்கு, தனியார் நிறுவனங்களிடம் இருந்து பாதுகாவலர்களை நியமிப்பது அத்தியாவசிய பணியாக உள்ளது. 


செக்யூரிட்டி என்ற பெயரில் பாதுகாவலர்களை பணிக்கு அமர்த்துவது தொடர்பான பணிகள் சங்க நிர்வாகிகள் பார்த்துக் கொள்வார்கள் என்று மற்றவர்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது.


பாதுகாவல் பணி தொடர்பான தெரியவரும் விஷயங்களை நிர்வாகிகளுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க உதவ வேண்டும். குறிப்பாக, உங்கள் வளாகத்துக்கு எத்தகைய நிறுவனம் வாயிலாக பாதுகாவலர்களை நியமிக்க வேண்டும் என்பது உங்கள் பட்ஜெட்டை பொறுத்தது. 


இன்றைய சூழலில், பெரும்பாலான அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அதிகமாக அமைக்கப்படுகின்றன. இதனால், எந்த அசம்பாவிதமும் நடக்காது என்று நினைத்து பாதுகாவலர்கள் நியமிப்பதில் செலவு குறைப்பில் மக்கள் ஈடுபடுகின்றனர்.


இதுபோன்ற அலட்சிய அணுகுமுறைகளால் குடியிருப்பு வளாக பாதுகாப்பு கேள்விக்குறியாகும் நிலை ஏற்படுகிறது. 


பாதுகாவலர்களை நியமிக்கும்போது அவர்களை அனுப்பும் நிறுவனங்கள் இப்பணிக்கான முறையாக உரிமம் பெற்றுள்ளதா என்று பார்க்க வேண்டியது அவசியம். 


தனியார் பாதுகாவல் நிறுவனங்கள் நடத்த வேண்டும் என்றால் அதற்கென உள்ள விதிகளின்படி ஒரு நிறுவனம் இருப்பதை உறுதி செய்து காவல் துறை உரிமம் வழங்குகிறது.


இந்த உரிமம் முறையாக புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்பது உள்ளிட்ட விஷயங்களை கவனித்து தான் அடுத்தடுத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 


உங்கள் குடியிருப்பு வளாகத்தில் நியமிக்கப்படும் பாதுகாவலர்கள், காவல்துறை வாயிலான நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட்டவர்களாக இருக்க வேண்டும். 


இதற்கான வரும் நபர்கள் குறித்த விபரங்களை உரிய முறையில் கவனிக்க வேண்டும் என்கின்றனர் கட்டுமானத் துறை வல்லுனர்கள். 


Saturday, July 27, 2024

அதி விரைவு முறையில் வீடுகள் கட்ட உதவும் புதிய தொழில்நுட்பங்கள்!

 அதி விரைவு முறையில் வீடுகள் கட்ட உதவும் புதிய தொழில்நுட்பங்கள்!

சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்று விரும்புவோர் அது தொடர்பான திட்டமிடலில் உரிய கவனம் செலுத்த வேண்டியது அவசியம். பொதுவாக சொந்த வீடு என்றால் அதை எப்போது, எப்படி, எங்கு கட்ட வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவோர் அதற்கான கால அட்டவணை விஷயத்தில் அலட்சியமாக இருக்கின்றனர்.

வீட்டுக்கான கட்டுமான பணிகளை குறிப்பிட்ட கால வரம்புக்குள் முடிக்க வேண்டும் என்பதில் மக்கள் கவனம் செலுத்த துவங்கியுள்ளனர். சாதாரணமாக ஒரு வீட்டை கட்ட வேண்டும் என்றால் அதன் அளவை பொறுத்து அதற்கான கால அவகாசம் முடிவு செய்யப்படும்.

இதில் கான்கிரீட் முறையில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் போது, ஒவ்வொரு கட்டத்திலும் நீராற்றுவதற்கு கால அவகாசம் அளிக்க வேண்டும்.

இயல்பு நிலையில் கான்கிரீட் போட்ட பின், அதில் இறுக்கம் ஏற்படவும் உட்புறத்தில் உறுதியான சூழல் ஏற்படவும், 20 நாட்கள் வரை கால அவகாசம் தேவைப்படும்.

துாண்கள், பீம்கள், மேல் தளம் ஆகியவற்றுக்கான பணிகளில் ஒவ்வொரு நிலையிலும், 20 நாட்கள் வரை கால அவகாசம் விடுவதால் அதிக நாட்கள் ஆவது போன்ற தோற்றம் ஏற்படுகிறது.
நீராற்றும் விஷயத்தில் சமரசம் இருக்கக் கூடாது என்பதால், இதில் மக்கள் அலட்சியம் காட்டுவதில்லை. இதற்கு தீர்வாக, சூப்பர் பாஸ்ட் எனப்படும் அதிவிரைவு முறையில் கட்டுமான பணிகளை முடிக்க சில வழிமுறைகள் வந்துள்ளன. இதன்படி, ஒரு கட்டடத்தில் துாண்கள், பீம்கள், சுவர்கள் போன்றவை தனித்தனி பாகங்களாக தயாரிக்கப்பட்டு, கட்டுமான இடத்தில் ஒருங்கிணைக்கப்படுகின்றன.

இதில், துாண்கள், பீம்கள், தளம், சுவர்கள் ஆகியவை ஒரே சமயத்தில் தயாரிக்கப்படும் போது, தனித்தனியாக விட வேண்டிய, 20 நாட்கள் என்பது தேவைப்படாது. அதுவும், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஆலைகளில் இந்த பாகங்கள் தயாரிக்கப்படும் போது, விரைவில் நீராற்றும் பணிகள் முடிந்துவிடும்.

இவற்றை கட்டுமான இடத்துக்கு லாரிகள் வாயிலாக கொண்டு சென்று வரிசை முறைப்படி ஒன்றுடன் ஒன்றாக இணைக்க வேண்டும். இப்பணிகள் சில நாட்களில் முடிந்துவிடும் என்பதால், ஒரு வீட்டை, அதிகபட்சம் 30 அல்லது, 35 நாட்களுக்குள் கட்டி முடித்துவிடலாம்.

இவ்வாறு ஆலைகள் வாயிலாக கட்டடத்தின் பாகங்கள் தயாரிக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்படும் நிலையில் வீடு உறுதியாக இருக்குமா என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படுகிறது.  கட்டடத்தின் பாகங்கள் மிக துல்லியமாக கணினி வாயிலாக கணக்கிடப்பட்டு, நவீன இயந்திரங்கள் வாயிலாக தயாரிக்கப்படுகின்றன. 
இதில் நீர்க்கசிவு, விரிசல் போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கலாம் என்றும் கட்டுமானத் துறை பொறியாளர்கள் கூறுகின்றனர்.

காம்பவுண்ட் சுவரில் விரிசலை தவிர்க்க லிண்டல் பீம் அமைக்கலாம்!

 காம்பவுண்ட் சுவரில் விரிசலை தவிர்க்க லிண்டல் பீம் அமைக்கலாம்!


புதிதாக வீடு கட்டும்போது, பிரதான கட்டுமானப் பணிகளில் தான் விரிசல் போன்ற பிரச்னைகள் வந்துவிடக் கூடாது என்பதில் கவனம் செலுத்துகிறோம். இதற்கு அப்பால் காம்பவுண்ட் சுவர் போன்ற கட்டுமானங்களில் விரிசல் தடுப்புக்காக உரிய கவனம் செலுத்துவதில்லை என புகார் கூறப்படுகிறது.

பொதுவாக, வீட்டுக்கான சுவர் என்பது கட்டடத்தின் சுமையை தாங்கும் ஒரு காரணி யாக இருப்பதால், அதற்கு மக்கள் முக்கியத்துவம் தருகின்றனர். ஆனால், காம்பவுண்ட் சுவர் என்பது, வெளியாரின் அத்துமீறிய நுழைவைத் தடுப்பதற்காக மட்டும்தான் என்ற எண்ணம் உள்ளது.

வீட்டுக்கான கட்டுமானப் பணியில், 10ல் ஒரு பங்கு என்ற அளவில்கூட காம்பவுண்ட் சுவர் கட்டுவதில் மக்கள் கவனம் செலுத்துவதில்லை. இதனால், பெரும்பாலான காம்பவுண்ட் சுவர்களில் மிக விரைவில் விரிசல்கள் ஏற்பட்டு, அவை உடைந்து விழும் நிலை ஏற்படுகிறது.

உங்கள் நிலத்தில் காம்பவுண்ட் சுவர் கட்டுவது என்றால் அதற்கான பொருள் எது என்பதை முதலில் தெளிவாக முடிவு செய்யுங்கள், செங்கல், ஹாலோ பிளாக், சாலிட் பிளாக் என எந்த வகை பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த முடிவை தெளிவாக எடுக்க வேண்டும்.

இதன்பின், காம்பவுண்ட் சுவரின் உயரம் எவ்வளவு இருக்க வேண்டும், தரைக்கு கீழ் எவ்வளவு ஆழம் செல்ல வேண்டும் என்பதையும் முடிவு செய்யுங்கள். பொதுவாக, தரை மட்டத்தில் இருந்து, 2 அடி ஆழத்துக்கு அஸ்திவாரம் அமைத்து காம்பவுண்ட் சுவர்களை கட்டுவது நல்லது என்று பரிந்துரைக்கப்படுகிறது.

இதேபோன்று, தரைக்கு மேல் காம்பவுண்ட் சுவர் கட்டும்போது, கிடைமட்டத்தில், 10 அடிக்கு ஒரு இடத்தில் துாண் அமைக்க வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்வது அவசியம். எந்த வகையில் காம்பவுண்ட் சுவர் அமைப்பதானாலும், அதில், 10 அடிக்கு ஒரு இடத்தில் பிரேக் விடுவது போன்று துாண்கள் அமைப்பது அவசியமாகிறது.

இத்துடன், தரைமட்டத்தில் இருந்து சுவர் எழுப்பும்போது, 7 அடி உயரத்தில் கட்டடத்துக்கு லிண்டல் பீம் அமைப்பது போன்று இங்கு, டம்மியாக லிண்டல் பீம் அமைப்பது அவசியம். இதன்மேல் எந்த வகையில் கூடுதல் சுமை ஏற்படப் போகிறது என்று நீங்கள் நினைக்கலாம்.

உண்மையில் சுவர்கள் கட்டும் போது, ஒரு குறிப்பிட்ட உயரத்தில் ஏற்படும் சுமை, அதன் மற்ற பகுதிகளில் முறையாக பரவ வேண்டும். இதில் குறைபாடு காணப்பட்டால் அந்த சுமையின் அழுத்தம் காரணமாக சுவரில் பல்வேறு இடங்களில் விரிசல்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

உயரமாக காம்பவுண்ட் சுவருக்கு தான் இப்படி என்று அலட்சியம் காட்டாமல் சாதாரண முறையில் கட்டும்போதும், குறிப்பிட்ட உயரத்தில் டம்மி லிண்டல் பீம் அமைக்கும் பணிகளை மேற்கொள்ளலாம் என்கின்றனர் கட்டுமானப் பொறியாளர்கள்.

Saturday, July 20, 2024

அடுக்குமாடி குடியிருப்பில் பதிவு செய்யாத சங்கத்தால் வரும் சிக்கல்கள் என்ன?

 

அடுக்குமாடி குடியிருப்பில் பதிவு செய்யாத சங்கத்தால் வரும் சிக்கல்கள் என்ன?
தமிழகத்தில் இன்றைய சூழலில் தனியாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்று மக்கள் நினைத்தாலும் விலைவாசி இதற்கு ஒத்துழைப்பதில்லை. இதனால், பெரும்பாலான மக்கள் தங்களுக்கான கனவு இல்லத்தை அடுக்குமாடி குடியிருப்புகளில் தான் தேடுகின்றனர்.


இதுபோன்று அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வாங்குவது என்று முடிவு எடுத்து, அதற்கான தேடலில் இறங்கும் நிலையில் எதை தேர்ந்தெடுப்பது என்பதில் தெளிவு வேண்டும். குறிப்பாக, எத்தகைய அடுக்குமாடி குடியிருப்பு நமக்கு ஏற்றதாக இருக்கும் என்பதை முடிவு செய்ய வேண்டும்.

தற்போதைய சூழலில், அதிக எண்ணிக்கையிலான வீடுகள் உள்ள கேட்டட் கம்யூனிட்டி முறையில் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய குடியிருப்புகள் வருகின்றன. இதுபோன்ற திட்டங்களில் வீடு வாங்கினால், வேலைக்கு செல்வதைத் தவிர்த்து பிற விஷயங்களுக்கு வெளியில் அலைய வேண்டாம்.

இதில் பராமரிப்பு பணியை நிர்வகிக்க, வீட்டு உரிமையாளர்கள் சங்கம் என்ற அமைப்பு இருக்கும். அதற்கான விதிமுறைகளின்படியே அனைத்து விஷயங்களும் அந்த வளாகத்தில் நடக்கும் என்பதை வீடு வாங்குவோர் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆனால், அதிக எண்ணிக்கையில் வீடுகள் இல்லாத சிறிய அளவிலான குடியிருப்புகளில் சங்கம் ஏற்படுத்த வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. தமிழக அரசின் அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் சட்டத்தின்படி, 5க்கு மேற்பட்ட வீடுகள் உள்ள குடியிருப்புகளில் சங்கம் இருப்பது கட்டாயம்.

எனவே, சிறிய அளவிலான அடுக்குமாடி குடியிருப்புகளிலும், அதன் அடிப்படை வசதிகளை பராமரிப்பதில் சங்கம் என்ற அமைப்பு இருப்பது அவசியம். பொதுவாக, 10க்கும் குறைவான வீடுகள் உள்ள குடியிருப்புகளில் சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்துவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் வருகின்றன.

பெயரளவுக்கு இவர்கள் ஒரு சங்கத்தை ஏற்படுத்தி, பொது விஷயங்களை அதன் வழியே நிர்வகித்தாலும், சட்டப்படி பதிவு செய்வதில்லை. ஒரு சங்கத்தை பதிவு செய்துவிட்டால், ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழு கூட்டம் நடத்தி, வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த விபரங்களை ஒவ்வொரு ஆண்டும், சங்கங்களின் பதிவாளரிடம் அளிக்க வேண்டியது அவசியம். இதில் சங்கத்தை பதிவு செய்வது, ஆண்டுதோறும் கணக்கு கொடுத்து புதுப்பிப்பது போன்ற பணிகளுக்கு ஏற்படும் செலவு, இதைத் தொடர்ந்து ஒரு நபர் பொறுப்பேற்று நடத்துவது என பல்வேறு பிரச்னைகள் வருகின்றன.

இந்நிலையில், 10க்கும் குறைவான வீடுகள் உள்ள குடியிருப்புகளில் சிக்கல் இன்றி அடிப்படை வசதி பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள மாற்று வழிமுறையை கண்டுபிடிக்க வேண்டும். அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் சட்டத்தில் இதற்கான விதிமுறைகளை தெளிவுபடுத்த வேண்டியது அவசியம் என்கின்றனர் பதிவுத்துறை அதிகாரிகள்.

மொட்டை மாடியில் கூடுதலாக விடப்பட்ட கம்பிகள் துரு பிடித்தால் என்ன செய்வது

 மொட்டை மாடியில் கூடுதலாக விடப்பட்ட கம்பிகள் துரு பிடித்தால் என்ன செய்வது 
பொதுவாக வீடு கட்டும் போது அதில் துாண்கள், பீம்கள், தளம் அமைப்பது சமீப ஆண்டுகளாக வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. இவ்வாறு, துாண்கள், பீம்கள், தளம் அமைக்கும் போது ஆர்.சி.சி., என்ற முறையில் கம்பிகளை உள்ளீடாக வைத்து கான்கிரீட் கலவை கொட்டப்படுகிறது.

இவ்வகை கட்டுமானங்கள் அதிக சுமையை தாங்கி, நீண்டகாலம் உழைக்கும் என்ற நம்பிக்கை பரவலாக காணப்படுகிறது. தொழில்நுட்ப ரீதியாக கான்கிரீட் கட்டடங்கள், 70 ஆண்டுகள் வரை நிலைத்து நிற்கும் என்று வல்லுனர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.


ஆனால், எதார்த்த நிலையில் பெரும்பாலான கான்கிரீட் கட்டடங்கள், 40 ஆண்டுகளை கடப்பதே சவாலான விஷயமாக உள்ளது. கான்கிரீட் கட்டடங்களில் ஏற்படும் நீர்க்கசிவு, விரிசல் போன்ற பிரச்னைகள் அதன் உறுதியையும் ஆயுள் காலத்தையும் குலைப்பதாக கூறப்படுகிறது.


இந்நிலையில் கட்டுமான பணியில் எந்த இடத்தில் எத்தகைய கம்பிகளை பயன்படுத்த வேண்டும், கான்கிரீட் தேர்வு விஷயங்களில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். அதே நேரம், இது போன்ற கட்டுமானங்களில் எதிர்காலத்தில் விரிவாக்கம் செய்ய வேண்டிய தேவை எழும்.


இதை கருத்தில் வைத்து துாண்கள், பீம்கள், மேல் தளம் ஆகியவற்றில் ஏதாவது ஒரு ஓரத்தில், கான்கிரீட் பூச்சு இல்லாமல் கம்பிகள் விடப்படுவது வழக்கம். இவ்வாறு கம்பிகளை விடும் நிலையில் அதில் பல்வேறு வகை பாதிப்புகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.


எதிர்காலத்தில் கூடுதல் கட்டடங்கள் கட்ட வேண்டும் எனும் போது. துாண்கள், பீம்களின் நீட்சியாக கம்பிகள் விடுவது அவசியம் தான். குறிப்பாக மொட்டை மாடியில் துாண்களின் நீட்சியாக விடப்படும் கம்பிகள் மழை போன்ற பாதிப்புகளை நேரடியாக சந்திப்பதால் துரு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன.


எனவே, மொட்டை மாடி போன்ற இடங்களில் எதிர்கால தேவைக்காக விடப்படும் கம்பிகளில் கான்கிரீட் கொட்டி டம்மியாக பூச்சு வேலை செய்ய வேண்டும். இது போன்ற கூடுதல் பாகங்களாக கம்பிகள் நீட்டிக்கொண்டு இருந்தால் அது அந்த இடத்தை பயன்படுத்துவோருக்கு ஆபத்தை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. எனவே, இத்தகைய கம்பிகளை பாதுகாப்பு காரணங்கள் அடிப்படையில் மூடுவதற்கான சரியான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.


டம்மி துாண்கள் அமைப்பது மட்டுமல்லாது, துரு பிடிக்காமல் இருப்பதற்கான ரசாயனங்களை பூசுவது போன்ற விஷயங்களையும் கடைப்பிடிக்கலாம் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.


Thursday, July 11, 2024

வீட்டுக்கான கட்டுமான பணிகள் முடியும் நிலையில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

வீட்டுக்கான கட்டுமான பணிகள் முடியும் நிலையில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!


பொதுவாக புதிய வீடு கட்டும் போது, அதற்கான பணிகளை எப்போது துவங்குவது என்பது குறித்து திட்டமிடுகிறோம். ஆனால், அதை திட்டமிட்டபடி முடிப்பது என்பதில் தான் பெரும்பாலான இடங்களில் பிரச்னைகள் ஏற்படுவதை பார்க்க முடிகிறது.


கட்டுமான பணிகளை துவங்கும் முன் எந்தெந்த காலத்தில் என்னென்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்த, கால அட்டவணை தயாரிக்க வேண்டும்.


இதில் குறிப்பிடப்படும் கால அவகாசத்தில் ஒவ்வொரு பணிகளையும் முடிக்க வேண்டும் என்பதை கவனத்தில் வைத்து செயல்பட வேண்டும்.


பெரும்பாலான இடங்களில், முறையாக திட்டமிடாத நிலையிலும், 3 மாதங்களுக்குள் கட்டுமான பணிகளை முடிக்க வேண்டும் என்ற அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அடுத்தடுத்து புதிய திட்டங்களைசெயல்படுத்தும் நிலையில் உள்ள ஒப்பந்ததாரர்கள் பணிகளை விரைந்து முடிக்க ஆர்வம் காட்டுவர்.


ஆனால், சில ஒப்பந்ததாரர்கள் தான் இதில் முறையான திட்டமிடல் இன்றி செயல்படும் போது, கட்டுமான பணிகள் முடிப்பது தாமதம் ஆகிறது. பொதுவாக, 3 மாதங்களில் கட்டுமான பணிகளை முடிப்பது என்றால் அதற்கு ஏற்ற வகையில் ஒவ்வொரு பணியும் முடிகிறதா என்பதை ஒப்பந்ததாரர்கள் சரி பார்க்க வேண்டும்.


ஒப்பந்தத்தில், 3மாதத்தில் முடிக்கப்படும் என்று சொல்லப் பட்ட நிலையில் அதுவரை எதையும் கண்டுக்கொள்ளாமல் இருந்து விட்டு, கடைசியில் பணிகள் முடியவில்லை என்று வருத்தப்படுவதிலும், கோபப்படுவதிலும் பயன் இல்லை. ஆரம்பத்தில் இருந்தே பணிகள் சரியான கால அவகாசத்தில் முடிக்கப்படுகிறதா என்று பார்ப்பது அவசியம்.


கட்டுமான பணிகள் முடியும் நிலையில், சுவர்களில் பூச்சு வேலை, வண்ணம் அடிப்பது, ஒயரிங், பிளம்பிங் போன்ற வேலைகள் உரிய வரிசை முறையில் முடிக்கப்பட வேண்டும். இதில், கதவுகள் அமைப்பது, உள் அலங்காரம் போன்ற பணிகளையும் முறையாக திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும்.


சில இடங்களில் மின்சார இணைப்பு பெறுவது தொடர்பான நடவடிக்கைகளில் தாமதம் ஏற்படும் என்பதால், அதற்கு ஏற்ப ஒயரிங் பணிகள் தாமதப்படுத்தப்படுகிறது. இதனால், அடுத்தடுத்த பிற கட்டுமான வேலைகளும் தாமதமாவதற்கு நாமே காரணமாகிவிடும் நிலை ஏற்படுகிறது.


குறிப்பாக, மின்சார இணைப்புகள், குடிநீர் வடிகால் இணைப்புகள் பெறுவது தொடர்பான விஷயங்களில் உரிய கவனம் செலுத்த வேண்டும். பணிகள் முடியும் நிலையில், வரைபடத்துடன் ஒப்பிட்டு விதிமீறல் எதுவும் இல்லை என்பதை பொறியாளர் முன்னிலையில் உறுதி செய்ய வேண்டியது அவசியம்.


பணிகள் முடிப்பதில் உரிமையாளர்கள் அலட்சியம் காட்டும் போது தான் விதிமீறல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன என்கின்றனர் நகரமைப்பு துறை வல்லுனர்கள்.

 

Virtual home tours beyond ease and convenience

  Virtual home tours beyond ease and convenience Digital tours are also contributing to a greener planet by minimising the number of resourc...