Tuesday, September 10, 2024

சிறிய பிரச்னைகளை அலட்சியப்படுத்துவதால் பெரிய பாதிப்புகள்!

 
    பொதுவாக கட்டடங்களில் பிளம்பிங்கில் மின் இணைப்பு போன்ற அமைப்புகளில் அவ்வப்போது சிறு குறைபாடுகள் ஏற்படுவது உண்டுஇந்த குறைபாடுகளை சரி செய்ய உரிய பணியாளர்களை அழைப்பது அவசியம்.

     அதே நேரத்தில் இது போன்ற சிறிய பிரச்னைகள் ஏற்படும் சமயத்தில் உடனடியாக பணியாளர் வருகை என்பது பெரும்பாலும் சாத்தியப்படாது.  உதாரணமாக, உங்கள் வீட்டில், சமையலறை அல்லது குளியலறையில் தண்ணீர் குழாயில் உடைப்பு ஏற்படுகிறது.  இரவிலோ, அதிகாலையிலோ இது போன்ற பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக பிளம்பரை வரவழைக்க முடியாது.
     அதற்காக, குழாயை அப்படியே விட்டுவைக்க முடியாது.  இதில் முதலுதவி என்ற அடிப்படையில் விஷயங்களை நாம் மேற்கொள்ள வேண்டும்.  இப்படி, குழாயில் உடைப்பு ஏற்பட்டால், அதற்கு தண்ணீர் வரும் பாதையை தடுக்க வேண்டும்.  இதற்காக மேல்நிலை தொட்டி அருகில் அமைக்கப்பட்டுள்ள வால்வுகளை மூடுவது நல்லது.
     இதனால், தண்ணீர் வீணாவது ஆரம்ப நிலையிலேயே தடுக்கப்படும்.  இதை விடுத்து பிளம்பர் வரும்வரை அப்படியே வைத்து இருப்பது நல்லதல்ல.  மேலும், மின் இணைப்புகளில் ஏற்படும் குறைபாடுகளை பொறுத்தவரை, பழுதுகள் ஏற்பட்டால் உடனடியாக வீட்டிற்கான பிரதான 'சுவிட்சை ஆப்' செய்துவிடவும்.  பழுது ஏற்பட்ட பகுதிக்கான மின் இணைப்பை துண்டித்து விட்டு மற்ற பகுதிகளில் மின் இணைப்புகளை பயன்படுத்தலாம்.  இது போன்று கட்டடங்களில் பழுதுகள் ஏற்படும் நிலையில் அதற்கான பணியாளர் வருவதற்கு முன் முதலுதவியாக நாம் செய்ய வேண்டியது என்ன என்பதில் தெளிவு வேண்டும்.  இது விஷயத்தில் பதற்றப்பட்டு எதையாவது செய்து பிரச்னையை பெரிதாக்காமல் இருக்க வேண்டும்.
     கட்டடங்களில் இத்தகைய சிறிய பிரச்னைகளை சரி செய்ய வழக்கமாக சில பணியாளர்களை தொடர்பில் வைத்து இருப்பது நல்லது.  அப்போது தான் பிரச்னையின் போது என்ன வகையான முதலுதவி செய்வது என்ற வழிகாட்டுதல்கள் பெறமுடியும்.
      எனவே, கட்டடங்களில் சிறிய அளவில் ஏற்படும் பிரச்னைகளை அலட்சியப்படுத்தாமல் சமாளிப்பதில் தெளிவான நடைமுறையை வகுக்க வேண்டும்கட்டட உரிமையாளர்கள் மட்டுமின்றி, கட்டடத்தை பயன்படுத்தும் அனைவரும் இது போன்ற வழிமுறைகளை அறிந்து இருக்க வேண்டும் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.

No comments:

Post a Comment

மூன்றாவது முழுமை திட்டத்துக்கு 28 தலைப்பில் சி.எம்.டி.ஏ., ஆய்வு

  மூன்றாவது முழுமை திட்டத்துக்கு 28 தலைப்பில் சி.எம்.டி.ஏ., ஆய்வு 'சென்னை பெருநகர் பகுதிக்கான மூன்றாவது முழுமை திட்டத்துக்காக, 28 தலைப்ப...