Saturday, October 7, 2023

மனையை உறுதி செய்யாமல் தவணை திட்டத்தில் பணம் செலுத்தினால் வரும் சிக்கல்கள்

 மனையை உறுதி செய்யாமல் தவணை திட்டத்தில் பணம் செலுத்தினால் வரும் சிக்கல்கள்

தமிழகத்தில் அங்கீகாரமில்லா மனைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  இதனால், பெரும்பாலான ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் முறையான அங்கீகாரத்துடன் வீட்டு மனை விற்பனையில் இறங்கியுள்ளன.
         இவ்வாறு, முறையாக அங்கீகாரத்துடன் விற்கப்படும் மனைகளை மட்டுமே மக்கள் வாங்குவது நல்லது.  இதில் தவணை முறையில் பணம் செலுத்தி மனை வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
         வீட்டு உபயோக பொருட்கள் போன்று மனை வாங்கிக்கொண்டு தவணை செலுத்தினால் பிரச்சனை இல்லை.  ஆனால், சில நிறுவனங்கள், மாதம், 5, 000 ரூபாய், 10, 000 என வசூலித்து கொள்கின்றன.
          ஐந்து ஆண்டுகள் வசூலுக்கு பின் தான் மனை உங்களுக்கு பத்திரப்பதிவு செய்யப்படும் என்று ஒரு திட்டத்தை செயல்படுத்துகின்றன.  பொது மக்களும், இத்திட்டத்தின் அபாயம் தெரியாமல் தவணை செலுத்தி ஆர்வம் காட்டுகின்றனர்.
         இவ்வாறு தவணை செலுத்திய பின் இறுதியில் நிறுவனம், உங்களுக்கு எத்தகைய மனையை கொடுக்கும் என்பது தெரியாது.  சில நிறுவனங்கள், இதில் விற்காத மனைகளை தவணை முறையில் வருவோருக்கு ஒதுக்குகின்றன.  உதாரணமாக, ஒருவர் 5, 000 ரூபாய் வீதம் 60 மாதங்களுக்கு தவணை செலுத்துகிறார்.  தவணை முடியும் நிலையில், அவருக்கு, 600 சதுர அடி மனை ஒதுக்கப்படுகிறது.  அந்த குறிப்பிட்ட மனைப்பிரிவில் யாரும் விரும்பாத ஒரு மூலையில் அந்த மனை அமைந்துவிடுகிறது.  தவணை செலுத்தியவருக்கு அந்த மனையை பெறுவதில் விருப்பமில்லை.
         இதுபோன்று பல்வேறு சிக்கல்களை தவிர்க்க சில வழிமுறைகளை ஆரம்பத்திலேயே கடைபிடிக்க வேண்டும்.  தவணை திட்டத்தில் சேரும் முன் எங்களுக்கான மனை எது என்பதை ஆவணத்தில் குறிப்பிட்டு தருமாறு கேட்க வேண்டும்.
          தவணை துவங்கும் நிலையில் மனையின் மதிப்பு, தவணை முடியும் நிலையில் மனையின் மதிப்பு இதில், எதன் அடிப்படையில் விலை முடிவு செய்யப்படுகிறது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.  சில நிறுவனங்கள், 3 லட்ச ரூபாய் வசூலித்துக்கொண்டு, 2 லட்ச ரூபாய் மதிப்பிலான மனையை உங்களுக்கு கொடுத்துவிட வாய்ப்புள்ளது.
        எனவே, தவணையில் மனை வாங்குவோர் ஆரம்ப நிலையிலேயே கூடுதல் விழிப்புடன் செயல்பட்டால் இத்தகைய சிக்கல்களை தவிர்க்கலாம் என்கின்றனர் நகரமைப்பு வல்லுனர்கள். 


No comments:

Post a Comment

மூன்றாவது முழுமை திட்டத்துக்கு 28 தலைப்பில் சி.எம்.டி.ஏ., ஆய்வு

  மூன்றாவது முழுமை திட்டத்துக்கு 28 தலைப்பில் சி.எம்.டி.ஏ., ஆய்வு 'சென்னை பெருநகர் பகுதிக்கான மூன்றாவது முழுமை திட்டத்துக்காக, 28 தலைப்ப...